ஓய்வு பெற்றார் டிஸ்கஸ் த்ரோ விகாஸ் கவுடா.... தடகள கூட்டமைப்பு கெடுபிடி காரணமா!
டெல்லி: தேசியப் போட்டிகளில் பங்கேற்காதவர்கள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று தடகள கூட்டமைப்பு கூறியது. இந்த நிலையில் வட்டு எறிதல் வீரரான விகாஸ் கவுடா, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயதாகும் விகாஸ் கவுடா, சர்வதேசப் போட்டிகளில் வட்டு எறிதலில் பல பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2013, 2015ல் தங்கம் வென்றார். 2011ல் வெள்ளி, 2005, 2017ல் வெண்கலம் வென்றார்.

2010 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற அவர், 2014ல் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2010ல் வெண்கலம், 2014ல் வெள்ளி வென்றார். 2004, 2008, 2012, 2016 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் 2012ல் நடந்த ஒலிம்பிக்கில் பைனல் வரை முன்னேறி, 8வது இடத்தைப் பிடித்தார்.
பத்மஸ்ரீ விருது வென்றுள்ள கவுடா கடந்தாண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
தேசியப் போட்டிகளில் பங்கேற்காதவர்கள், சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என்று இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி தேசியப் போட்டியில் பங்கேற்காததால் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் இந்தோனேசியாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டில் பங்கேற்க விகாஸ் கவுடாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் நேற்று அறிவித்தார்.


Click it and Unblock the Notifications