ஜகார்த்தா: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை, வினேஷ் போகாட் தான்.
50கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் சற்று முன் நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூகி அய்ர்-ஐ 6-2 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றார் வினேஷ் போகாட்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
ஜப்பானின் யூகி அய்ர் மல்யுத்தத்தில் சிறந்த வீராங்கனை என பெயர் பெற்றவர். அவரை வீழ்த்த சிறிது சிரமப்பட்டாலும், 6-2 என வீழ்த்தி விட்டார் வினேஷ்.
வினேஷ் போகாட் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறி இந்த தங்கப் பதக்கத்தை வென்று இருக்கிறார். மற்றொரு பெண்கள் மல்யுத்தப் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மல்லிக் மற்றும் காமன்வெல்த் வெள்ளி வென்ற பூஜா தண்டா, இருவரும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா இந்த வெற்றியோடு சேர்த்து, இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியா பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.