Vinesh Phogat: வினேஷ் போகட் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டை உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியற்றவர் என அறிவித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் களமிறங்கத் தயாராகி வரும் வினேஷ் போகட் போட்டியிட அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு செய்ய உடனடியாக நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, "இந்தியாவில் தாய்மை என்பது போற்றத்தக்கது. மகப்பேறு காரணமாக ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் விளையாட வரும் ஒரு சர்வதேச வீராங்கனையை முடக்கும் வகையில் மல்யுத்த சம்மேளனம் செயல்படுவது ஏற்கத்தக்கது அல்ல. விளையாட்டு விவகாரங்களில் சம்மேளனம் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படக் கூடாது" என நீதிபதிகள் எச்சரித்தனர்.

தேர்வு விதிகள் மாற்றம் ஏன்?
வரும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க வினேஷ் போகட் அனுமதி கோரியிருந்தார். ஆனால், சம்மேளனம் அவரை ஜூன் 26, 2026 வரை போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவித்துள்ளது. ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி, ஓய்விலிருந்து திரும்புபவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், "வினேஷ் போகட் ஜூலை 2025-ல் தாயானார். இப்போது மீண்டும் விளையாடத் தயாராக இருக்கும் நிலையில், அவருக்காகவே தேர்வு விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஏன் கருதக்கூடாது? பழைய நடைமுறைகளை விடுத்து தற்போது சம்மேளனம் எடுத்துள்ள இந்த மாற்றம் விளையாட்டுத் துறைக்கு ஏற்ற ஒன்றாக அல்ல" எனச் சுட்டிக்காட்டினர்.
மத்திய அரசுக்கு உத்தரவு
விளையாட்டு ஆணையத்தின் விதிகளில் சில தளர்வுகள் அளிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வினேஷ் போகட்டின் தற்போதைய உடல்நிலை மற்றும் ஆட்டத்திறனை மதிப்பீடு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அவர் தகுதிச் சுற்றில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் வினேஷ் போகட் முக்கியப் பங்காற்றியவர். மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தலையீடு வினேஷ் போகட்டிற்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
