Vinesh Phogat : பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் இறுதி போட்டியில் தகுதி பெற்ற பின்பும் எடை அதிகரித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இதற்கு காரணம் வினேஷ் போகத் கடந்த ஆண்டு அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேனத்தின் தலைவராக இருந்த பாஜகவை சேர்ந்த பிரிஜ் புஷன் சிங்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஏதேனும் சதி தீட்டப்பட்டு வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சர்ச்சை இருந்தது.

இந்த நிலையில் தான் இறுதிப் போட்டி வரை வந்ததால் தமக்கு பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று வினேஷ் போகத் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை ஒத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் வினேஷ் போகத்தின் மனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இதுதான் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தீர்ப்பு வெளியாகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தால் நிச்சயம் அதே நாளில் தான் தீர்ப்பு வெளியாகும்.
ஆனால் வெள்ளிக்கிழமை தருகிறோம் என கூறிவிட்டு புதன்கிழமையே தீர்ப்பு வழங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வினேஷ் போகத் வழக்கில் உடனே தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் தான் அவர் வழக்கை தொடர்ந்தார். மேலும் ஒலிம்பிக் தொடர் முடிவதற்குள் தீர்ப்பு கொடுத்து விடுவோம் என தீர்ப்பாயமும் அறிவித்திருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு முறை தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இந்தக் காலதாமதமும், தற்போது முன்கூட்டியே தீர்ப்பு வெளியானதும் முறை கேட்டிற்கு வழிவகுத்து இருக்கலாமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றால் அதனை வினேஷ் போகத் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர் இந்த பதக்கம் இருந்தால் மட்டுமே வினேஷ் போகத் எந்த அளவுக்கு சாதனை செய்தால் என்று தெரியப்போவதில்லை. இதனால் வினேஷ் போகத் அடுத்த ஒலிம்பிக் தொடருக்கு தயாராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.