பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த இறுதிப் போட்டிகளில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதலாக இருக்கிறார் என்று கூறி வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.இதனால் அவர் எந்த ஒரு பதக்கத்தையும் வெல்ல முடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் வினேஷ் போகட் தகுதி செய்யப்பட்டதற்கு பின் சதி இருப்பதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜய் இந்த சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய வீரர்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதை தடுப்பதற்காகவே செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் இதைப் பார்க்கின்றேன். வினேஷ் போகட் செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது அது அனைவராலும் பாராட்டும் வகையில் இருந்தது.
வினேஷ் போகட் வெற்றி பெற்றதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கின்றேன். விளையாட்டு வீரர்களுக்கு எடையை குறைப்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. எங்களால் ஒரே இரவில் ஐந்து முதல் ஆறு கிலோ வரை எடை குறைக்க முடியும். எனவே 100 கிராம் எடையை குறைப்பது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.
எனக்கு என்னவோ யாரோ இதில் தலையிட்டு வினேஷ் போகட்டை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. 100 கிராம் எடையை குறைப்பதற்கு கண்டிப்பாக ஒலிம்பிக் சம்மேளனம் அனுமதி கொடுத்து இருக்க வேண்டும். நான் ஒலிம்பிக்கில் பல போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே கிடையாது.
முதலில் எங்களுக்கு புரதச்சத்து, மாவுச்சத்து தேவையில்லை. எங்களுக்கு ஓய்வு கொடுத்தாலே போதும். தொடர்ந்து இரண்டு நாட்களில் போட்டி இருக்கும்போது முதலில் எடையை குறைப்பதில் தான் எங்களுடைய கவனம் இருக்கும்.நாட்டுக்காக பசியை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியும். இதனால் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு உடல் மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராக என்ன செய்ய வேண்டுமோ அதை தான் நாங்கள் செய்வோம் என்று விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.