பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை வினேஷ் போகட் வந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் தினேஷ் போகட் எடை அதிகரித்ததை அறிந்தவுடன் உடனடியாக அதனை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக இந்திய விளையாட்டுத்துறை குழுவை சேர்ந்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இதற்கு காரணம் பாஜகவின் முன்னாள் எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அப்போதைய தலைவராக இருந்த பிரிஜ் புஷன் சிங்குக்கு எதிராக தினேஷ் போகத் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஒலிம்பிக் தொடரில் அவர் வெற்றி பெற்று தங்கம் வெல்லும் சூழல் ஏற்பட்டது.
இதனால் தான் இந்த விவகாரம் வெடித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தான் வினேஷ் போகட் உடல் எடையை குறைக்காமல் தகுதி நீக்கம் ஆனது இது முதல் முறையல்ல என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அதற்கு முன்பு நடைபெறும் பல போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதனை ஒலிம்பிக் கோட்டாக்கான தொடர் என்று அழைப்பார்கள்.
அப்படி 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு ஏப்ரல் மாதம் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. அப்போது 48 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகட் விளையாடுவதற்காக தயாராகிய நிலையில் அனுமதிக்கப்பட்டதை விட 400 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி அந்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஒலிம்பிக் கோட்டா தொடரில் பங்கேற்று அதில் வென்று தினேஷ் போகட் ஒலிம்பிக்கில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இது போல் ஒரு பிரச்சனையில் தற்போது வினேஷ் போகட் சிக்கி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டு இருக்கிறார்.