பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் இறுதி போட்டி வரை வந்து அதன்பின் எடை கூடியதாக ஒரு தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். தாம் இறுதிப்போட்டி வரை வந்த பிறகு தான் உடல் எடை அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் அதிகரித்து இருப்பதால் தமக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று வினேஷ் போகத் போராடினார்.
இதனை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடர்ந்தார். எனினும் விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான் என்றும், இதனால் வினேஷ் போகத்திற்கு தனியாக பதக்கம் வழங்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இதனால் வினேஷ் போகத் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோய் இருக்கிறது. வினேஷ் போகத் ஒரு சாதாரண வீராங்கனையாக இந்த தொடரில் களமிறங்கவில்லை. ஒட்டுமொத்த விளையாட்டு அமைப்பையும் எதிர்த்து அதில் நடக்கும் தவறுகளை கேள்வி கேட்டு தெருவில் போராடி ஒலிம்பிக் வரை வந்திருக்கிறார். வீராங்கனைகளுக்காக வினேஷ் போகத் போராடிய போது நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார் என்று ஒரு தரப்பினர் அவர் மீது குற்றம் சாட்டினர்.
மேலும் போராட்டத்தில் தமக்கு கிடைத்த வலிகளுக்கு ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்துடன் வினேஷ் போகத் களமிறங்கினார். வினேஷ் போகத்துக்கு கடந்த ஒரு ஆண்டு முழுவதும் பல தடைகள் இருந்தது. போராட்டத்திற்குப் பிறகு வினேஷ் போகத்துக்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் வினேஷ் போகத் தன்னுடைய தன்னம்பிக்கையால் மீண்டு வந்தார். வினேஷ் போகத் எப்போதும் 53 கிலோ எடை பிரிவில் தான் விளையாடுவார். ஆனால் அந்த இடத்திற்கு மற்றொரு இந்திய வீராங்கனை அந்தீம் பாங்கல் தயாராகிவிட்டார் என கூறி வினேஷ் போகத்தை 50 கிலோ எடை பிரிவில் விளையாட வற்புறுத்தப்பட்டார்.
எனினும் அதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் களமிறங்கினார். ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத் முதல் சுற்றிலே வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனும் ஆன ஜப்பான் வீராங்கனை சுசாக்கியை எதிர்கொள்ள போவதுதான்.
சர்வதேச அளவில் 82 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட தோல்வியை தழுவாமல் சுசாகி இருந்தார். அவரை எப்படி வினேஷ் வீழ்த்தப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடிபட்ட சிறுத்தை களத்தில் இறங்கி வேட்டையாடினால் எப்படி இருக்கும் என்பதை மல்யுத்த களத்தில் வினேஷ் போகத் காட்டி யாருமே இதுவரை வீழ்த்தாத வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்தார்.
அதன் பிறகு இறுதிப்போட்டி வரை வந்து தான் இரண்டாவது நாள் எடை பார்க்கும் போது 100 கிராம் அதிகரித்து இருந்திருக்கிறார். தனது உடல் எடையை குறைக்க வினேஷ் போகத் தலை முடியை வெட்டும் அளவுக்கு சென்றார். வினேஷ் போகத் இரவு முழுவதும் எடையை குறைக்க போராடி இருக்கிறார்.
வினேஷ் போகத்தின் இந்த போராட்ட குணத்தை பார்க்கும் போது பிரபல கவிஞர் அல்லாமா இக்பாலின் கவிதைதான் அவருக்கு சரியாக பொருந்தும் என தோன்றுகிறது. "உழைப்பால் உங்களுடைய நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளுங்கள்! உங்களுடைய பிடிவாத குணத்தை பார்த்து கடவுளே நமது விதியை நிர்ணயிப்பதற்கு முன்பு உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று எழுதி இருப்பார்.
அது வினேஷ்க்கு தான் சரியாக இருக்கும். காமன்வெல்த், ஆசிய போட்டிகள் மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை போன்ற சாதனையை படைத்திருந்தாலும் அவருக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்கவில்லை. எனினும் ஒலிம்பிக் பதக்கம் இல்லை என்றாலும் விழிப்பு நடத்திய இந்த போராட்டமும் களத்தில் கொடுத்த கம்பேக்கும் அவர் எப்போதுமே ஒரு சாம்பியன் ஆக தான் நமது மனதில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.