பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகட் பெற்றிருந்தார். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்பு நடத்தப்பட்ட எடை சோதனையில் அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி அவரை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்திருக்கிறது.
இதனால் பதக்கத்தோடு நாடு திரும்புவார் என காத்திருந்த வினேஷ் போகட்டின் மாமாவும் அவருடைய சிறு வயது ஆசானுமான மகாவீர் போகட், இந்த செய்தியை கேட்டு கதறி அழுதார். வினேஷ் போகட் கடந்த ஆண்டு முழுவதும் பல பிரச்சனைகளை களத்திற்கு வெளியே சந்தித்தார்.

அப்போதைய பாஜக எம் பி யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக வினேஷ் போகட் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வெற்றி பெற்ற போது இது பிரிஜ் பூஷன் கன்னத்தில் விழுந்த அறை என்று மகாவீர் போகட் கூறியிருந்தார்.
தற்போது காலையில் வினேஷ் போகட் எடை அதிகரித்து விட்டதாக கூறி தகுதி செய்யப்பட்டதை அறிந்து அவர் அழுதார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தேசமே வினேஷ் போகட் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தது. விளையாட்டு விதிகள் இதுபோன்று இருக்கிறது. ஆனால் வீரர்கள் 50 அல்லது 100 கிராம் கொஞ்சம் கூடுதலாக எடை இருந்தால், அவரை விளையாட அனுமதிப்பது தான் வழக்கம்.
ஆனால் இன்று வினேஷ் போகட் அனுமதிக்கப்படவில்லை. நான் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் வினேஷ் போகட் குறித்து கவலைப்படாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நிச்சயம் அவர் ஒரு நாள் ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்புவார். அடுத்த ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என்று மகாவீர் போகட் கூறியுள்ளார். இவருடைய கதாபாத்திரத்தில் தான் டங்கல் படத்தில் அமீர்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.