டெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஞ்ரங் புனியா இருவரும் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தம் விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் வினேஷ் போகத். ஆனால் இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று வினேஷ் போகத் எடை சோதிக்கப்பட்ட போது 100 கிராம் கூடுதலாக இருந்ததன் காரணமாக அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

82 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இருந்ததால், வினேஷ் போகத் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் என்று இந்தியாவே எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட கிடையாது என்று வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
இதன்பின் விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்றும் வினேஷ் போகத்திற்கு பதக்கம் மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் முன் நின்று போராடிய வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் தடம் பதித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சக மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரும், காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர். இதன்பின் சொந்த ஊரில் வினேஷ் போகத்தை ஏராளமானோர் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே வினேஷ் போகத்தின் அடுத்தக் கட்ட திட்டம் என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வே பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வடக்கு ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக வினேஷ் போகத் பணியாற்றி வந்தார். இதுகுறித்து வினேஷ் போகத் தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்திய ரயில்வே துறையில் சேவையாற்றியது வாழ்வில் மறக்க முடியாத காலமாகும். இன்னும் சொல்லப் போனால், ரயில்வே துறையில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.
ஆனால் வாழ்வின் இந்த தருணத்தில் ரயில்வே துறையில் சேவையாற்றுவதில் இருந்து பிரிந்து செல்ல முடிவு எடுத்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வே துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக என்றும் ரயில்வே குடும்பத்திற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நாடாளுமன்றக் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் சந்தித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கவுள்ளனர். இதனால் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் தொடருக்கு பின் வினேஷ் போகத் நாடு திரும்பிய பின், அவர் அரசியல் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.