சரியான வசதிகளை கொடுத்தால் தான் ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும்.. மல்யுத்த வீராங்கனை வினேஷ்
லக்னோ : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என நினைத்தால், அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
தற்போது ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு தன்னை தயார் செய்து வரும் மல்யுத்த வீராங்கனை வினேஷ், நான்கு வருடங்கள் முன்பு நடந்த ஏசியன் கேம்ஸில் இளம் வீராங்கனையாக பங்கேற்ற போது வெண்கலம் வென்றார். ஆனால், சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகள், மற்றும் ஸ்பெயினின் கிராண்ட்பிரிக்ஸ் போன்ற விளையாட்டு தொடர்களில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஏசியன் கேம்ஸ் குறித்து அவர் பேசிய போது, “முன்பு நான் இளம் வீரராக இருந்தேன். ஆனால், இப்போது என்னிடம் அனுபவம் இருக்கிறது. அதை முழுமையாக உபயோகிக்க நினைக்கிறன். என் சிறந்த செயல்பாட்டை அளித்து பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயல்வேன், முக்கியமாக தங்கதிற்கு. அதைவிட சிறந்த பதக்கம் இல்லை” என கூறினார்.
மேலும் கூறுகையில், “நீங்கள் ஒலிம்பிக் பதக்கம் வேண்டும் என நினைத்தால் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் எந்த சூழ்நிலைகளிலும் பயிற்சி மேற்கொள்கிறோம். ஆனால், அது எங்கள் சோர்வில் இருந்து மீள்வதை பாதிக்கிறது. காயம் ஏற்படவும் காரணமாக இருக்கிறது” என கூறினார்.
“இப்போது மழைக்காலமாக இருந்தாலும் (லக்னோவில் இருக்கும்) மல்யுத்த அரங்கம் வெப்பமாக இருக்கிறது. நாங்கள் நிறைய வியர்வை சிந்துகிறோம். அது எங்கள் அயர்வில் இருந்து மீள்வதை பாதிக்கிறது. என் முட்டியில் நான் வலியை உணர்கிறேன். சில சமயம் மின்சாரம் இருக்காது. நான் பயிற்சியை தவிர்க்க வேண்டியதாக இருக்கும். ஆனால், நாங்கள் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினார் வினேஷ்.
இவர் கேட்கும் கேள்விகளும் நியாயமாகவே இருக்கிறது. இந்திய ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என கூறினால் மட்டும் போதாது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் வழங்கப்படும் சிறந்த வசதிகளை நம் நாட்டு வீரர்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டும்.
Story first published: Tuesday, August 14, 2018, 11:50 [IST]
Other articles published on Aug 14, 2018


Click it and Unblock the Notifications