Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டி வரை வந்த வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகரித்து இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் இறுதிப் போட்டி வரை வந்த பிறகுதான் எடை கூடி இருந்ததால்,தமக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாண்டில் இயங்கி வரும் சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வினேஷ் போகத் ஆதரவாக இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மல்யுத்த சம்மேளனம் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது. வினேஷ் போகத்திற்காக அதனை மாற்ற முடியாது என்று கூறி இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வினேஷ் போகத் தரப்பு வீரர்கள் ஒரு சுற்றில் விளையாடிவிட்டு அடுத்த சுற்றுக்கு தயாராக முயற்சியில் ஈடுபடும் போதுதான் இவ்வாறு எடை கூடியதால், இந்த விதியையே மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்பு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வினேஷ் போகத் மனுவை நிராகரித்து இருப்பதாக சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
வினேஷ் போக எடை கூடி இருந்தது விதிப்படி தவறு என்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன் கூட்டியே தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. . மேலும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவரான பிடி உஷா அண்மையில் வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது என்று பேசியது இந்த வழக்கில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இதன் மூலம் வினஷ் போகத்தின் உழைப்பிற்கு வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என இந்திய நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த முடிவு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற வினேஷ் போகத், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெயர் பெற்றவர். தம்மிடம் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே இல்லாத நிலையில், கை அருகே வந்து அதை தவறவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.