மும்பை: ஐபிஎல் -3வது தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் முற்றிலும் புறக்கணிப்பட்டிருப்பதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் வாரியமும் கடும் கோபமடைந்துளளன. இந்த வீரர்களுக்கு விசா வழங்கப்படுவது குறித்து இந்திய அரசு மெளனம் காத்ததால் தான் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை என்று அந் நாட்டு வாரியம் குற்றம் சாட்டியுள்ளளது.மும்பையில் நடந்த ஐபிஎல்-3 வீரர்களுக்கான ஏலத்தில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட அத்தனை ஐபிஎல் அணிகளும் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்து விட்டன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசியிடமும் முறையிடப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று கருதியதால்தான் அத்தனை ஐபிஎல் அணிகளும் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லையாம். மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு வேப்பங்காயாக கசந்து போயிருக்கிறது. இந்த நிலையில், நிச்சயம் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைக்காது. எனவே அவர்களை ஏலத்தில் எடுப்பதால் எந்தப் பலனும் இருக்காது என்பதால்தான் யாரும் பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்க முன்வரவில்லையாம்.ஏலத்தில் 11 பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் இருந்தன. ஷாஹித் அப்ரிதி, உமர் குல், முகம்மது ஆமிர், உமர் அக்மல், சொஹைல் தன்வீர், ராணா நவேத் உல் ஹசன், கம்ரன் அக்மல், சயீத் அஜ்மல், மிசாப் உல் ஹக், இம்ரான் நசீர், அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் இந்த ஏலப் போட்டியில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் யாரையும் ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்ரிதி, இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் என்று காட்டமாக கூறியுள்ளார்.பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் அஜாஸ் ஹூசேன் ஜக்ரானி கூறுகையில், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் போய் விளையாட அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அவர்கள் புறக்கணிப்பட்டது வருத்தம் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இந்தியத் தரப்பில் விசா தருவதில் பெரும் இழுபறி காணப்பட்டதே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்று கூறப்படுவது குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.ஆனால் தாங்கள் திட்டமிட்டு பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிக்கவில்லை என்று ஐபிஎல் அணி நிர்வாகங்கள் அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா தரப்படும் என்ற உத்தரவாதத்தை இவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்த்தனராம். அது கிடைக்காததால்தான் எதற்கு வம்பு என்று விட்டு விட்டதாக கூறப்படுகிறது.இனிமேல் வர மாட்டார்களாம் வீரர்கள்..ஐபிஎல் அவமானத்தால் டென்ஷனாகியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் இனிமேல் நடைபெறவுள்ள எந்த ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.குறைந்தபட்சம், இந்தியா - பாகிஸ்தான் உறவு சீராகும் வரை இந்த முடிவை அமல்படுத்தப் போவதாகவும் அவர்கள் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.ஆஸ்திரேலியாவில் தற்போது முகாமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள், பிரிஸ்பேன் நகரில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியு்ளனர். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் உறவு சீராகும் வரை ஐபிஎல் போட்டிகளில் - அழைத்தால் கூட - பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தனராம்.ஐபிஎல் ஏலத்தில் தாங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டது குறித்து வீரர்கள் ஒருமித்த குரலில் பெரும் ஏமாற்றத்தை வெளியிட்டனராம். இது ஐபிஎல் மற்றும் அதன் அணி நிர்வாகங்கள் செய்த கூட்டுச் சதி என்றும் அவர்கள் கோபமாக கருத்து தெரிவித்தனராம்.அது வேற, இது வேற-பாக்.குக்கு இந்தியா அறிவுரை:இந் நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எடுக்கப்படாததற்கும், இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இரண்டையும் பாகிஸ்தான் தொடர்புப்படுத்திப் பார்க்கக் கூடாது. அரசியலுக்கும், தனிப்பட்ட அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.ஐபிஎல் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான விவகாரமாக உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அரசுக்கும், ஐபிஎல்லுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு சம்பந்தமும் கிடையாது. வீரர்களைத் தேர்வு செய்வதும், அது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதையும் அரசு செய்யவில்லை. ஐபிஎல் என்ற தனிப்பட்ட அமைப்புதான் அதைச் செய்கிறது.அரசு நிகழ்ச்சிகளுக்கும், தனிப்பட்ட தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இது அரசு சம்பந்தப்பட்டதா, தனியார் சம்பந்தப்பட்டதா என்பதை யோசித்துப் பார்த்து பாகிஸ்தான் பேச வேண்டும் என்றார் கிருஷ்ணா.இதற்கிடையே, ஐபிஎல் அவமானத்திற்குப் பதிலடி தருவதாக கூறி பாகிஸ்தான் எம்.பிக்கள் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பவிருந்த திட்டத்தை அந்த நாட்டு அரசு ரத்து செய்து விட்டதாம். #13;