சென்னை : செஸ் விளையாட்டில் முடி சூடா மன்னனாக விளங்கும் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் 54வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்திற்கு பல பேர் பல பெருமைகளை பெற்று தந்திருக்கிறார்கள். அதில் விஸ்வநாதன் ஆனந்திற்கும் தனி இடம் இருக்கிறது.
சென்னையில் பிறந்து வளர்ந்து செஸ் உலகையே ஆச்சரியப்பட வைத்தவர் தான் விஸ்வநாதன் ஆனந்த். செஸ் விளையாட்டில் இந்தியாவை மாபெரும் சக்தியாக உருவெடுக்க வைத்தவர்களில் விஸ்வநாதன் ஆனந்தின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது.

இதேபோன்று மத்திய அரசு கொண்டு வந்த பத்ம விபூஷன் என்ற பட்டத்தை முதல் முறையாக பெற்ற நபர் என்ற பெருமையும் விஸ்வநாதன் ஆனந்துக்கு தான் கிடைத்தது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளும் விஸ்வநாதனிடம் சேர்ந்து அவை பெருமை பெற்று கொண்டன. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர், செஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த முதல் இந்தியர்.
இதேபோன்று செஸ் வரலாற்றிலேயே 2800 புள்ளிகளை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை விஸ்வநாதன் ஆனந்த் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெற்றார். விஸ்வநாதன் ஆனந்த் இன்றும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அது மட்டும் அல்லாமல் அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டியாக விஸ்வநாதன் ஆனந்த் இருக்கிறார். எவ்வாறு கிரிக்கெட்டில் சச்சினை பார்த்து மற்ற வீரர்கள் வந்தார்களோ அதேபோல விஸ்வநாதன் ஆனந்தை பார்த்து பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் பிறக்க தொடங்கினார்கள்.
ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் காதல் வந்துவிட்டால் அதில் கடின முயற்சி செய்து உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும். விஸ்வநாதன் வாழ்க்கையில் பின்பற்றுவது இரண்டே இரண்டு விஷயங்கள் தானாம். அதில் ஒன்று தவறுகள் எப்போதும் நடக்கும் அது நமக்கு கடும் ஏமாற்றத்தை கொடுக்கும். எனினும் தொடர்ந்து நாம் உழைத்தோம் என்றால் நம்மால் முன்னேற முடியும்.
இன்னொன்று உங்களுடைய ஒரு திறமை இருந்தால் நீங்கள் என்ன ஆகப் போகிறீர்கள் என்று அது உங்களுக்கு சொல்லும். அதே சமயம் திறமை மட்டும் இருந்தால் போதாது. அறிவும் வளர்ச்சியும் எளிதாக கிடைக்காது. தொடர்ந்து கடினமாக உழைத்து முயற்சிகளை நீங்கள் எடுக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு உடனே முன்னேற்றம் தெரியாது. எனினும் ஒரு நாள் நீங்கள் எதிர்பார்க்காத அளவு உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்பதுதான். இதனை தன்னுடைய மைண்ட் மாஸ்டர் என்ற புத்தகத்தில் ஆனந்த் கூறியிருக்கிறார். விஸ்வநாதன் ஆனந்தின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 125 கோடியாக உள்ளது.