நார்வே: இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது.
இதில் கிளாசிக்கல் பிரிவின் 5ம் சுற்றில் இன்று விஸ்வநாதன் ஆனந்த் - கார்லசன் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வழக்கமான சுற்றில் 40 நகர்வுகள் செய்தும் இருவரும் சரிசமமாக நின்றதால், ஆட்டம் டை பிரேக் சடன் டெத் முறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 50 நகர்த்தல்களில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆன்ந்த் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கிளாசிக்கல் பிரிவில் விஸ்வநாதன் ஆனந்த், தனது முதல் மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை கண்டிருந்தார். ஆனால் 4வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லியிடம் மட்டும் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்து சறுக்கினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றி பெற்று கம்பேக் தந்துள்ளார். இந்த போட்டியில் இன்னும் 4 சுற்றுகள் மீதமுள்ளன. கிளாசிக்கல் பிரிவுக்கு முன்பு பிளிட்ஸ் பிரிவில் ஏற்கனவே மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.