கருணாநிதி கிரேட்.. தீவிர விளையாட்டு ரசிகர்.. விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்!
டெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சூப்பர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி கிரேட். தீவிர விளையாட்டு ரசிகர் என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.

மரியாதைக்குரிய கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழக அரசியலில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர். என்னுடைய வாழ்நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை கிடைத்தது. நான் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, எனக்கு பாராட்டு விழா நடத்தி, ஒரு செஸ் செட் பரிசாக அளித்தார். அதை எப்போதும் மறக்க முடியாது என்று ஆனந்த் கூறியுள்ளார்
விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் சாதனைகளை ஊக்குவிப்பவர். அவருடைய பேச்சுகள் மற்றும் பேச்சுத் திறனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.
கடந்த 2001ல் ஈரானின் தெஹ்ரானில் நடந்த போட்டியில்தான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் பாராட்டு விழா நடத்தியதுடன், அரசு சார்பில் ஒரு பிளாட்டையும் ஆனந்துக்கு பரிசாக அளித்தார்.


Click it and Unblock the Notifications