உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்..
ஸ்டவஞ்சர்: உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார்.
நார்வே சாம்பியன் ஷிப் போட்டியில், பல்கேரியா, அர்மேனியா, நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் மிக மோசமாக விளையாடி வருகிறார். நான்காவது சுற்றுக்கு முன்பு அவர் 0.5 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் அவர் ஆனந்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
ஆனால், ஆனந்த் மிகவும் அபாரமாக ஆடி பலவீனமான நிலையில் உள்ள கார்ல்சனை வீழ்த்தினார். 47வது நகர்த்தலில் தனது தோல்வியை கார்ல்சன் ஒப்புக்கொண்டார். நான்காவது சுற்றின் முடிவில் 2.5 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த் முன்னேறியுள்ளார்.
3.5 புள்ளிகள் பெற்றுள்ள பல்கேரிய வீரர் வெசலீன் டொபலோவ் முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்க வீரர் ஹிகாரு நாகமுரா (3), நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி (2.5) ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளார்கள். அரைப் புள்ளி மட்டும் பெற்றுள்ள கார்ல்சன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறார்.


Click it and Unblock the Notifications