செயின்ட்லூயிஸ்: அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்ற ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நடந்த 3 ஆவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியா கிராண்ட்மாஸ்டர் வாசெலின் தபலோவை சந்தித்தார்.
முதல் இரண்டு சுற்றுகளில் தோல்வி கண்டு இருந்த ஆனந்த் நெருக்கடிக்கு மத்தியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டம் 31 ஆவது காய் நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது.
இந்த டிராவின் மூலம் ஆனந்த் தனது புள்ளி கணக்கை தொடங்கி இருக்கிறார். முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி கண்டு இருந்த வாசெலின் தபலோவ் 3 ஆவது சுற்று முடிவில் 2.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பிரான்ஸ் வீரர் மாசிமே வாசிரை தோற்கடித்தார்.