பெய்ஜிங்: தடகள வீரர் உசைன் போல்ட் 2015ம் ஆண்டுக்கான பெய்ஜிங் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு டபுள் ஸ்பிரிண்ட் பிரிவில் தங்கம் வென்ற வேகத்தில் அவரை கேமராமேன் ஒருவர் கீழே விழவைத்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான பெய்ஜிங் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் உலகின் வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்று பெயர் எடுத்த உசைன் போல்ட் கலந்து கொண்டுள்ளார்.
டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் உசைன் போல்ட் மற்றொரு வெற்றிகரமான வீரரான ஜஸ்டின் கேட்லினை முந்தி தங்கப் பதக்கம் வென்றார். டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு போல்ட் பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பர்ட்ஸ் நெஸ் அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது கேரமாமேன் ஒருவர் போல்ட்டை பின்தொடர்ந்து அவரை வீடியோ எடுத்தார். திடீர் என்று அவர் நிலைதடுமாறி போல்ட் மீது சாய இருவரும் கீழே விழுந்தனர்.
கீழே விழுந்த வேகத்தில் எழுந்த போல்ட் சிரித்தபடியே நடந்து சென்றுவிட்டார்.