டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவங்க சில நாட்களே உள்ள நிலையில், பதக்கம் வெல்லக் கூடியவராக கருதப்பட்ட இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, போட்டியில் இருந்து விலகினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவில் 18ம் தேதி துவங்குகிறது. இதில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் பங்கேற்கவிருந்தார் மீராபாய் சானு.
23 வயதாகும் உலக சாம்பியனான மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடை தூக்கி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்தார்.
காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதையடுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதிக எடையை தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.
இருந்தாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக அவர் தயாராகி வந்தார். இந்த நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக நடக்க உள்ள தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று கோச் விஜய் சர்மா ஆலோசனை கூறியிருந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லக் கூடியவராக கருதப்பட்ட மீராபாய் சானு, திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.