மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டிற்கு தடை விதித்த இந்திய மல்யுத்த சம்மேளனம்.. காரணம் என்ன?
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஓய்வை அறிவித்த இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்று மீண்டும் போட்டிகளில் களமிறங்க ஆயத்தமாகி வந்தார். அவரது வருகைக்காக பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் அவருக்கு அதிரடியாக தடை விதித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவரது இந்த மறுபிரவேசத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட காரணம் என்ன, சம்மேளனத்தின் நோட்டீஸில் உள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் மே 10 முதல் 12 வரை தேசிய அளவிலான தரவரிசை மல்யுத்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் மூலம் மீண்டும் தனது மல்யுத்த பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்க வினேஷ் போகட் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒழுக்கமின்மை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கூறி அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம், வரும் 2026 ஜூன் 26 வரை அவர் எந்தவொரு உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்க தகுதியற்றவர் என அதிரடியாக அறிவித்துள்ளது.

மல்யுத்த சம்மேளனம் அவருக்கு அனுப்பியுள்ள 15 பக்க நோட்டீஸில் பல பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மல்யுத்த விதிகளின்படி, ஓய்வுக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் ஒரு வீரர் 6 மாதங்களுக்கு முன்பே ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிற்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் வினேஷ் போகட் அந்த விதியை முறையாக பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எடை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டது, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது, 2024 மார்ச் மாதம் நடந்த தேர்வுகளில் 2 வெவ்வேறு எடைப் பிரிவுகளில் பங்கேற்றது உள்ளிட்ட 4 முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் 14 நாட்களுக்குள் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தன்னை மீண்டும் போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்க மல்யுத்த சம்மேளனம் வேண்டுமென்றே சதி செய்வதாக வினேஷ் போகட் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார். முதலில் இந்த தேசிய தரவரிசைப் போட்டிக்கான அவரது பதிவு நிராகரிக்கப்பட்டு, பின்னர் கடைசி நாளில் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதி விதிமுறைகளிலும் சம்மேளனம் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, 2025 மற்றும் 2026ல் நடந்த அதிகாரப்பூர்வ போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே ஆசிய போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நடந்த வெளியேற்றத்திற்குப் பிறகு வினேஷ் போகட் எந்தவொரு போட்டியிலும் இதுவரை பங்கேற்கவில்லை. இதனால், புதிய விதியின்படி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்விலும் அவர் பங்கேற்க முடியாத அபாயம் எழுந்துள்ளது. மல்யுத்த சம்மேளனத்திற்கும் அவருக்கும் இடையேயான இந்த தொடர் மோதல் இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications