டெல்லி : இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து தான் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக் அறிவித்திருக்கிறார்.
மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகாரை கூறினார்கள். இது தொடர்பாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரிஜ் சிங் புஷன் இருந்தார். அவருக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சிங் இனி மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்து அவரின் விசுவாசி மற்றும் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார்.
இதனை எதிர்த்து சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து சஞ்சய் குமார் தேர்தலில் நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அடுத்து இன்று தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த ஷாக்சி மாலிக் செய்தியாளர்களை சந்தித்து இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
40 நாட்களாக நாங்கள் சாலையில் படுத்து தூங்கினோம். எங்களுடைய போராட்டத்திற்கு பல மக்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் சிங்கின் நண்பர் தற்போது இந்திய மல்யுத்த சமநிலத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இனி நான் மல்யுதத்தில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று அவர் கூறினார். சாக்சி மாலிக் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். பி வி சிந்து பேட்மிண்டனில் வெள்ளி பதக்கமும் ஷாக்சி மாலிக் வெண்கல பதக்கமும் வென்று அந்த தொடரில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.