பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரில் டை பிரேக்கர் ஆட்டம் என்றால் என்ன? எப்படி நடத்தப்படும்? எத்தனை சுற்றுகளாக நடத்தப்படும் என்ற சந்தேகங்கள் குறித்து பார்க்கலாம்.
செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் தமிழக வீரர் பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இவர் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார். இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் வேண்டுமென்றால் டிரா செய்தார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் 12வது போட்டியில் எந்த திட்டத்தின் படி ஆட்டத்தை டிராவை செய்தாரோ, அதேபோல் இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றிலும் டிராவுக்காகவே ஆடினார். இதனால் ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது.
டை பிரேக்கர் என்று செஸ் போட்டியில் எப்படி நடத்தப்படும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. டென்னிஸ் தொடரில் சமநிலை ஏற்பட்டால், எப்படி டை பிரேக்கர் நடத்தப்படுமோ, அதேபோல் தான் செஸ் போட்டிகளுக்கும் நடைபெறும். ஆனால் செஸ் போட்டியில் நடக்கும் டை பிரேக்கர் சுற்று, ரேபிட் போட்டிகளாக நடத்தப்படும்.
ரேபிட் வகை போட்டிகள் என்பது குறிப்பிட்ட நேரத்திற்கும் விளையாடி முடிக்கப்பட வேண்டும். அந்த வகையில் டை பிரேக்கர் சுற்றின் ஒவ்வொரு ரவுண்டும் இரு ஆட்டங்களாக நடைபெறும். கறுப்பு காய்களுடன் ஒரு முறையும், வெள்ளை காய்களுடன் ஒரு முறையும் இரு வீரர்களும் விளையாடுவார்கள். அந்த வகையில் டை பிரேக்கரின் முதல் ரவுண்டில் இரு வீரர்களுக்கு தலா 25 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் தலா 10 வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.
இதில் வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை என்றால், டை பிரேக்கரின் இரண்டாவது சுற்றிலும் ஒரு ஆட்டங்கள் நடத்தப்படும். அதில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 5 வினாடிகள் வழங்கப்படும். அதன் முடிவிலும் வெற்றியாளர்களை கண்டறிய முடியாவிட்டால், டை பிரேக்கர் சுற்றின் 3வது ஆட்டம் நடைபெறும். அதில் இரு வீரர்களுக்கு தலா 5 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு 3 வினாடிகள் கூடுதகாக வழங்கப்படும்.
அப்படியும் சாம்பியனை கண்டறிய முடியாவிட்டால், கடைசியாக சடன் டெத் என்ற முறையில் ஆட்டம் நடக்கும். அதில் ஒரேயொரு போட்டி மட்டுமே நடக்கும். அந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்களோ, அவரே வெற்றியாளராகவே அறிவிக்கப்படுவார். அந்த ஆட்டத்திற்கான நேரமாக இரு வீரர்களுக்கு தலா 3 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு கூடுதலாக 1 வினாடிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.