லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி... கபில்தேவ்- டோணி இடையேயான '28 ஆண்டுகள்' ஒற்றுமை!
லண்டன்: வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
1986-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதே இதற்கு முன்பு இந்திய அணி இந்த மைதானத்தில் பெற்ற கடைசி வெற்றியாகும். இதுவே லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற ஒரே வெற்றியாக இருந்தது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு டோணி தலைமையிலான இந்திய அணி இங்கு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இளம் வீரர்கள் சாதனை
சச்சின், ராகுல் திராவிட், லட்சுமண், கங்குலி போன்ற அனுபவ வீரர்கள் விளையாடியபோது கூட இந்தியாவால் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வெல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது இளம் இந்திய வீரர்கள் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்து விட்டனர்.

லார்ட்ஸில் இதுவரை
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையே இதுவரை 16 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் 11 முறை இங்கிலாந்து வென்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஓர் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

3 ஆண்டுக்குப் பிறகு
அன்னிய மண்ணில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா டெஸ்ட் போட்டியில் இப்போதுதான் வென்றுள்ளது, இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கபில்தேவ்- டோணி
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது, லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது என முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கும், இப்போதைய கேப்டன் டோணிக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன.

28 ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பை
இந்திய அணிக்கு முதல்முறையாக 1983-ல் உலகக் கோப்பையை வென்று தந்தது கேப்டன் கபில்தேவ். அதன் அதற்கு அடுத்தபடியாக 2011ல் உலகக் கோப்பையை வென்று தந்தவர் டோணி. 28 ஆண்டுகள் கழித்து டோணி தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

28 ஆண்டுக்குப் பின்னர் லார்ட்ஸ் வெற்றி
இதே போல கபில் தேவ் தலைமையில் 1986-ல் இந்திய அணி முதல்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு டோணி தலைமையிலான அணி மீண்டும் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

3 ஆண்டுகள்
1983-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு 3 ஆண்டுகளுக்குப் பின் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸில் வெற்றி பெற்றது. 2011-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு டோணி னி தலைமையில் இந்தியா லார்ட்ஸில் மீண்டும் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications