ஸ்விட்சர்லாந்து: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்று 4வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதன்பின் நீரஜ் சோப்ரா உடனடியாக பயிற்சியை தொடங்கினார். ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த 2 வாரத்தில் ஸ்விட்சர்லாந்தில் லுசானே டைமண்ட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த டைமண்ட் லீக்கில் இருந்து பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் விலகி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பலரும் டைமண்ட் லீக்கில் விளையாட ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் 90 மீட்டர் தூரத்தை கடப்பதே வீரர்களின் முதல் கனவாக உள்ளது.
இதில் டாப் 6 இடங்களில் நிறைவு செய்பவர்கள் நேரடியாக பிரஸ்ஸல்ஸ் டைமண்ட் லீக் தொடருக்கு தகுதி பெறுவர். இந்த நிலையில் லுசானே டைமண்ட் லீக்கில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு நடக்கவுள்ளது. இதனை ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாஸ் ஓடிடி செயலியிலும் நேரலையில் பார்க்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே நீரஜ் சோப்ரா 90 மீட்டர் தூரம் ஈட்டியை வீச முடியாமல் தடுமாறி வருகிறார். ஒலிம்பிக் தொடருக்கு பின் பேசிய போது கூட, இனியும் 90 மீட்டர் தூரம் குறித்து கவலைப்படப் போவதில்லை. அதனை கடவுளின் கைகளில் விட்டுவிட்டேன் என்று விரக்தியாக பேசியிருந்தார். அதேபோல் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பறிகொடுத்த தங்கத்தை, டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா கைப்பற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது.