
45 ரன் எடுத்த சச்சின்
இதில் முதலில் இந்தியா பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் சச்சினும், சடகோபன் ரமேஷும். ரமேஷ் 20 ரன்களில் கிளம்பிப் போக, சச்சின் 45 ரன்கள் வரைத் தாக்குப் பிடித்தார்.

தாங்கிப் பிடித்த டிராவிட் - அஸாருதீன்
ராகுல் டிராவிடும், கேப்டன் அஸாருதீனும்தான் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தனர். டிராவிட் 119 பந்துகளைச் சாப்பிட்டபோதும் 61 ரன்களை எடுத்தார். அஸார் பங்கு 59 ஆகும்.

227 ரன்களுக்கு ஆட்டம் ஓவர்
50 ஓவர்கள் வரைத் தாக்குப் பிடித்து விட்ட இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது.

பதம் பார்த்த பிரசாத் - ஸ்ரீநாத்
அடுத்து ஆட வந்த பாகிஸ்தானை இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் வெங்கடேச பிரசாத்தும், ஸ்ரீநாத்தும் பதம் பார்த்து விட்டனர். சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவும் தன் பங்குக்கு நொங்கெடுத்து விட்டார்.

அடுத்தடுத்து அடி
பாகிஸ்தான் வீரர்களை அரை சதம் போட விடாத அளவுக்கு அடுத்தடுத்து விக்கெட்களைச் சாய்த்தது இந்தியா.

போராடிய இன்சமாம்
இன்சமாம் உல் ஹக் கடுமையாக போராடி 41 ரன்களை எடுத்தார். சயீத் அன்வர் 36 ரன்களுக்கு விழுந்தார். மொயின் கான் 34 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் மட்டையாகி விட்டனர். இதனால் 45.3 ஓவரிலேயே 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான்.

ஹாட்ரிக் வெற்றி இந்தியாவுக்கு
உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

5 விக்கெட் சாய்த்த வெங்கடேச பிரசாத்
வெங்கடேச பிரசாத் புயல் வேகத்தில் பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்ரீநாத் தன் பங்குக்கு 3 விக்கெட்களைக் காலி செய்தார். மிச்சம் இருந்த 2 விக்கெட்களையும் கும்ப்ளே எடுத்தார்.

கர்நாடக நாயகர்கள்
கர்நாடகத்தைச் சேர்ந்த ராகுல் டிராவிட், பிரசாத், ஸ்ரீநாத், கும்ப்ளே ஆகியோர் இணைந்து இந்தியாவுக்காக பிரமாதமான வெற்றியைத் தேடித் தந்தது சுவாரஸ்யமான ஒற்றுமையாக அமைந்தது. ஆட்ட நாயகனாக வெங்கடேச பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்தருக்கு முதல் ஆட்டம்
அப்போது உலகை அச்சுறுத்திய பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும்.


Click it and Unblock the Notifications










