ஆம்லாவை வாங்க ஆளில்லை.. ஒரு மேட்சும் ஆடாத கரியப்பாவுக்கு ரூ.2.40 கோடி! பின்னணி என்ன?
பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் சங்ககாரா, ஜெயவர்த்தனே, ஆம்லா போன்றோரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில் இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் கூட விளையாடாத கர்நாடகாவை சேர்ந்த கே.சி.கரியப்பா என்ற சுழற்பந்து வீச்சாளரை ரூ.2.40 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணி வாங்கியுள்ளது டாக் ஆப் தி டவுன் ஆகியுள்ளது.

ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.2.40 கோடிக்கு
8வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த கரியப்பாவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தாவும், டெல்லியும் கடுமையாக போட்டிபோட்டன. ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கரியப்பாவை போட்டி போட்டே காஸ்ட்லியாக்கிவிட்டனர் இவ்விரு அணிகளும். கடைசியில் கொல்கத்தாவுக்காக ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் கரியப்பா.

முதல் தர போட்டியில் கூட ஆடியதில்லை
இத்தனைக்கும் கரியப்பா இதுவரை முதல் தர போட்டியில் கூட விளையாடியது கிடையாது. ஆனால் கர்நாடக பிரீமியர் லீக் எனப்படும் உள்மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்தவராகும். 20 வயதான கரியப்பா நேற்றைய ஏலத்தின் மூலம் இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்றுவிட்டார்.

ஆய்வு செய்யப்பட்டேன்
இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் தெரியுமா.. "ஒருநாள் கொல்கத்தா அணியின் வீடியோ ஆய்வாளர் ஸ்ரீகாந்த் என்னை அவர்கள் முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கம்பீர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பவுலிங் ஆலோசகர் வாசிம் அக்ரமும் அங்கு இருந்தார். இவர்களை பார்த்ததுமே எனக்குள் பரவசமும், பதற்றமும் ஏற்பட்டது.

வாசிம் அக்ரம் திருப்தி
இதையடுத்து நான் பவுலிங் போட கம்பீர் பேட்டிங் செய்தார். இதை ஆய்வு செய்து பார்த்த வாசிம் அக்ரம், உங்கள் பந்து வீச்சு அருமையாக உள்ளது. பிட்னஸ் விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் வையுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். இதன்பிறகுதான் ஐபிஎல் ஏலப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. எனக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.10 லட்சம் அளவுக்கு விலைபோவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கோடிக்கணக்கில் கொடுத்து கொல்கத்தா வாங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பெற்றோருக்கு வீடு
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனது கனவு நனவாகியுள்ளது. எனது பெற்றோர்கள் எனக்காக ஏகப்பட்ட தியாகங்கள் செய்துள்ளனர். எனக்கு கிடைத்துள்ள பணத்தை கொண்டு அவர்களுக்காக ஒரு வீடு வாங்குவேன். இவ்வாறு கரியப்பா கூறினார்.

மர்ம ஸ்பின்னர்
மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன், இலங்கையின் அஜந்தா மென்டிஸ் போன்றோர் எந்த மாதிரி ஸ்பின்னர்கள் என்பதை இதுவரை எந்த பேட்ஸ்மேனாலும் கணிக்க முடியவில்லை. அதேபோன்றவர்தான் கே.சி.கரியப்பா என்கின்றனர் அவரது ஆப்-ஸ்பின் பவுலிங்கை பற்றி அறிந்தவர்கள். எந்த பந்து எந்த திசையில், எந்த கோணத்தில் சுழன்று செல்லும் என்று கணிக்க முடியாதபடி பந்து வீசுபவராம் கரியப்பா. இவ்வாண்டில் கொல்கத்தாவின் சர்ப்ரைஸ் இவர்தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications