சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளான இன்று மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இன்று அவர் பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் யோகேஷ்வர் தத் பங்கேற்றார்.

தத்துக்கு இது 4வது ஒலிம்பிக் போட்டியாகும். யோகேஷ்வர் தத் யார், அவர் செய்தன சாதனைகள் என்ன என்பதைப் பார்ப்போம்...
8 வயதில் இருந்து மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார் ஹரியானாவை சோர்ந்த தத்.
2003ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் தத் தங்கப் பதக்கம் வென்றார்.
2004ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 55 கிலோ எடை பிரிவில் 18வது இடத்தை பிடித்தார்.
2006ம் ஆண்டு தனது தந்தை இறந்த 9வது நாள் தோஹாவில் நடந்த ஆசிய போட்டிகளில் தத் கலந்து கொண்டார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டபோதிலும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தத் பதக்கம் எதுவும் வெல்லவில்லை.
2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற தத் 60 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2014ம் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் யோகேஷ்வர் தத் 65 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
2014ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் 65 கிலோ எடை பிரிவில் யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்.
33 வயதாகும் தத் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி ரியோ ஒலிம்பிக்தான். இந்தப் போட்டியை ஏமாற்றத்துடன் அவர் முடித்துள்ளார்.