
ரியான் பர்ல
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன். கடந்த மே மாதம் ஒரு சம்பவம் நிகழ்கிறது. அதாவது, ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம் வைரல் ஆனது. வீரர்கள் அணியும் ஷூக்கள் சிதறிக் கிடப்பது போன்று இருந்த அந்த புகைப்படத்தில் கேப்ஷனிட்ட ரியான், "எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி நடந்தால் நாங்கள் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் தொடருக்கு பின்பு எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்டவேண்டிய அவசியம் இருக்காது" என பதிவிட்டிருந்தார்.

கிடைத்த ஸ்பான்சர்
அவரின் உருக்கமான இந்த பதிவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரிப்ளை செய்தனர். அதில், பலரும் தாங்கள் ஷூ வாங்கித் தருகிறோம் என்று பதிவிட்டனர். சிலர், 'உங்கள் காலணி சைஸ் அனுப்புங்கள், ஷூ வாங்கி அனுப்புகிறேன்' என்று பதிவிட, ட்விட்டர் நெகிழ்ச்சி களமானது. எனினும், ரியானின் இந்த டீவீட்டை கண்ட உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான Puma உதவிக்கரம் நீட்டியது. ரியான் பர்ல் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள அந்நிறுவனம், "பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டது. சொன்னது போல அந்த வீரருக்கு ஸ்பான்சர்ஷிப்பும் கொடுத்தது.

கோடிக்கணக்கில் பிஸ்னஸ்
இப்போது அப்படியே இந்தியாவுக்கு வருவோம். குறிப்பாக தமிழகத்திற்கு வருவோம். தமிழகத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் ஓட்டப்பந்தய வீராங்கனை ரேவதி வீரமணி. ஆனால், தமிழக அணியால் தொடர் ஓட்டப் பிரிவில் கடைசி இடமே பிடிக்க முடிந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அளவுக்கு தகுதி வாய்ந்த ரேவதி வீரமணி காலணிகளை வாங்க முடியாமல், மாநில அளவில் வெறுங்காலுடன் ஓடியவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. இதே Puma நிறுவனம், தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கோடிக்கணக்கில் பிஸ்னஸ் செய்கிறது. Puma மட்டுமல்ல adidas, nike போன்ற நிறுவனங்களும் இங்கு கோடிக்கணக்கில் வருமானம் பார்த்து வருகின்றனர்.

நிலை என்று மாறுவது?
அமெரிக்க தடகள வீரர்கள், வீராங்கனைகளுக்கு மில்லியன் கணக்கில் ஸ்பான்சர் செய்யும் இந்த நிறுவனங்கள், ரேவதி போன்ற ஷூ வாங்க கூட வழியில்லாத நிலையில் இருப்பவர்களுக்கு ஏன் ஸ்பான்சர்ஸ் கொடுப்பது இல்லை என்பதே நமது கேள்வியும், சந்தேகமும் கூட. அடிப்படை வசதி என்ற ஒன்றை உருவாக்கிக் கொடுக்காமல் நாம் எப்படி மெடலை மட்டும் எதிர்பார்க்க முடியும்? இந்தியாவில் கொழுத்த லாபம் பார்க்கும் நிறுவனங்கள் ஏன் ரேவதி போன்றோருக்கு ஸ்பான்சர் கொடுக்க முன்வருவதில்லை? ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீராங்கனை ஒரு ஷூ கூட வாங்க முடியாத வறுமையில் இருப்பவர் என்ற நிலையை நாம் என்றுதான் மாற்றுவது?

தங்கம் அள்ளலாம்
நல்ல ஸ்பான்சர்ஸ் கிடைத்தால், ரேவதி போன்ற திறமைமிக்க வீராங்கனைகளால், ஒரே ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் என்ன.. 3, 4 பதக்கங்களை கூட அள்ளி வர முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நம்மிடம் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவற்றைக் கண்டறிந்து ஊக்குவிக்க தான் ஆட்கள் தான் குறைவு. இந்த நிலையே நீடிக்குமாயின், நாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு தங்கமாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்திலேயே எப்போதும் இருக்க வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications