தொடங்கப் போகும் விளையாட்டு
இதற்கிடையில் ஜூன் மாதத்தில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக, போட்டிகள் நடத்த அனுமதி அளித்த உலக சுகாதார மையம் ரசிகர்களை அனுமதிக்க தடை விதித்தது.
பேட்மிண்டன்
இதற்கு விளையாட்டு வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் சர்வதேச போட்டிகளை நடத்தினால் அது பொருளாதார ரீதியாக விளையாட்டு கமிட்டிகள் மற்றும் போட்டி நடத்தும் நாடு ஆகியவற்றிற்கு சிக்கலை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் போட்டிக்கு இப்படி என்றால், டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 22 சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் நடத்தப்படும் என உலக பாட்மிண்டன் சம்மேளனம் கூறி உள்ளது.
வீரர்களுக்கு நெருக்கடி
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை உலக நாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளாத நிலையில் உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் இந்த அறிவிப்பு, வீரர்களுக்கே நெருக்கடியை கொடுக்கும். விளையாட்டு கமிட்டிகள், உலக நாடுகள், உலக சுகாதார மையம் ஆகியவற்றின் அறிவிப்பிக்களும், வழிகாட்டுதல்களும் ஒன்றுடன் மற்றொன்று முரண்பட்டதாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இன்னும் மீளவில்லை
இது ஒருபுறம் இருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாடும் தாங்கள் முழுவதும் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மீண்டு விட்டதாக இதுவரை கூறவில்லை. மாறாக பாதிப்பிற்கு ஆளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவித்து வருகின்றன. இதற்கிடையில் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் கொரோனாவின் 2 வது அலை வீச அதிக வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் இதை உறுதிப்படுத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில் விளையாட்டு போட்டிகளை உடனடியாக துவக்குவது, வீரர்களின் மனோபலம், ஆரோக்கியம் ஆகியவற்றை கேள்விக்குறி ஆக்கும் நிலையே ஏற்படும்.
பொறுமை காப்பது நல்லது
மேலும் ரசிகர்கள் இல்லாத போட்டிகளும் வீரர்களை மனதளவில் சோர்வடைய செய்யவும் வாய்ப்பு அதிகம். உலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகள், பயண கட்டுப்பாடுகள், போட்டிகள் நடத்தப்படும் நாடுகளில் கொரோனா பரவல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் போன்ற பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். உலக அளவில் கொரோனா கட்டுக்குள் வர துவங்கியது உறுதி செய்யப்பட்ட பிறகு விளையாட்டு போட்டிகளை துவங்குவது பொறுத்தமாக இருக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.