அமெரிக்கா: உலக தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.

இந்த போட்டியில் மட்டும் அவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தால் உலக தடகள போட்டியில் 39 ஆண்டு வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திரத்தை படைத்திருப்பார். எனினும் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக இந்தியாவின் அஞ்சு பாபி மட்டுமே பதக்கம் வென்றிருந்தார்.
தகுதி சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்திய நீரஜ் சோப்ரா முதல் முறையாக உலக தடகள சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சென்றார். இதனையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா தனக்கான முதல் வாய்ப்பில் ‛பவுல்' செய்தார். இதையடுத்து 2வது வாய்ப்பில் 82.39 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் மற்றும் 4வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசி அசத்தினார். கடைசி 2 வாய்ப்புகளில் பவுல் ஆன போதும், 88.13 என முன்பு வீசிய தூரமே அவருக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.