சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆறாவது சுற்றில் சீன வீர டிங் லீரனுடன் தமிழக வீரர் குகேஷ் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்களே சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள்.
முதல் சுற்றில் சீன வீரர் டிங்லீரனுடன் இரண்டாவது சுற்று சமனிலும் மூன்றாவது சுற்று தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாவது சுற்று ஆட்டம் சமனில் முடிவடைய ஆறாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும் குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினார். தொடர்ந்து இரண்டு சுற்று சமனில் முடிவடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார்.
குகேசை குழப்புவதற்காக டிங் லீரன், ஒரே மாதிரியான நகர்த்தலை பயன்படுத்தினார். ஒரு கட்டத்தில் குகேஷ் போட்டியை சமனில் முடித்துக் கொள்ளலாம் என்று கூற, சீன வீரர் டிங் லீரன்,அதற்கு மறுத்து குகேஷை போட்டியை தொடர கூறினார் .எனினும் அடுத்த சில நகர்த்தலில் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிவடைந்தது.
இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் முடிவடைந்தது. வெற்றி பெறுவதற்காக போட்டியை தொடர சொன்ன டிங் லீரன், கடைசியில் மொக்கை வாங்கினார். இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டேவிட் ஹொவல், ராணி களத்தில் இருந்தும் சீன வீரர் மிகப் பெரிய வாய்ப்பை கோட்டை விட்டதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இருவரும் தற்போது தலா 3 புள்ளிகள் பெற்று சமனில் இருக்கிறார்கள். திங்கட்கிழமை நாளை ஓய்வு தினமாக இருக்கிறது. இதனை அடுத்து ஏழாவது சுற்று போட்டி செவ்வாய் கிழமை தொடங்கும்.