சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 12வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். 14 சுற்றுகள் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் டிங் லிரனை 18 வயது வீரரான குகேஷ் எதிர் கொண்டார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒரு சுற்று வெற்றி பெறும் வீரருக்கு ஒரு புள்ளியும் சமன் பெற்றால் அரைப்புள்ளியும் வழங்கப்படும்.
இந்த நிலையில் முதல் சுற்றில் டிங் லீரன் வெற்றி பெற மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றியை கண்டார். இதனை அடுத்து நான்காவது சுற்றில் இருந்து பத்தாவது சுற்று போட்டி வரை ஏழு சுற்றுகள் டிராவை கண்டது. இந்த சூழலில் இருவரும் ஐந்து புள்ளிகள் பெற்று இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற 11 வது சுற்றில் குகேஷ் அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.

இதன் மூலம் குகேஷ் 6க்கு 5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க எஞ்சிய மூன்று சுற்றுகளை டிரா கண்டாலே வெற்றியை பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் 12வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. நேற்று படுமோசமாக விளையாடிய டிக் லீரன் இன்று அதிரடியை காட்டினார்.
நேற்று விளையாடிய லீரனுக்கும் இன்று விளையாடிய டிங் லீரனுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. ஆரம்பம் முதலே குகேஷ் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தன்னுடைய புதிய யுத்திகளால் குகேஷை திணற அடிக்க ஒரு கட்டத்தில் குகேஷை தோல்வியை நோக்கி தள்ளினார்.
எனினும் குகேஷ் கடுமையாக போராடி தோல்வியை தவிர்க்க முயற்சி செய்தார். இதனை அடுத்து 39வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து குகேஷூம் லிரனும் தற்போது 6 புள்ளிகள் பெற்று சமனில் இருக்கிறார்கள்.
இனி எஞ்சிய இரண்டு சுற்று போட்டிகளில் இரண்டுமே டிராவை நோக்கி சென்றால் வெற்றியாளர்களை தீர்மானிக்க ராபிட் ரவுண்டு செஸ் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த இரண்டு சுற்று போட்டிகளில் ஏதேனும் ஒன்றிலாவது குகேஷ் வெற்றி பெற்றால், அவருக்கு சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.