உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டிகள் வரும் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரரான குகேஷ் நடப்பு சாம்பியன் ஆன சீனாவை சேர்ந்த டிங் லிரனை எதிர்கொள்கின்றார்.
1886 முதல் நடைபெற்று வரும் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 17 பேர் தான் உலக சாம்பியனாக பட்டம் வென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் 18 வதாக புதிய சாம்பியனாக குகேஷ் வருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் குக்கேஷ் வென்றால் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். இந்தத் தொடர் 14 சுற்றுகளை கொண்டதாகும். இதில் ஒரு சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். டிரா அடைந்தால் அரைப்புள்ளி கிடைக்கும். எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளை பெறுகிறார்களோ, அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
ஒருவேளை 14 போட்டிகளுமே சமணில் முடிவடைந்து. இருவருமே 7 புள்ளிகள் பெற்றால் வெற்றியாளர்களை தீர்மானிக்க டை பிரேக் முறை கடைப்பிடிக்கப்படும். முதல் சுற்று போட்டி நவம்பர் 25ஆம் தேதியும், இரண்டாம் சுற்று போட்டி நவம்பர் 26 ஆம் தேதியும்,மூன்றாவது சுற்று போட்டி நவம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும். நான்காவது சுற்று போட்டி நவம்பர் 29ஆம் தேதியும், ஐந்தாவது சுற்றுப்போட்டியில் நவம்பர் 30ஆம் தேதியும், ஆறாவது சுற்று போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதியும் நடைபெறும்.
ஏழாவது சுற்று போட்டி டிசம்பர் மூன்றாம் தேதியும், எட்டாவது சுற்று போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும், ஒன்பதாவது சுற்று போட்டி டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறும். பத்தாவது சுற்று போட்டி டிசம்பர் 7ஆம் தேதியும், 11-வது சுற்று போட்டி டிசம்பர் எட்டாம் தேதியும், பன்னிரண்டாவது சுற்று போட்டி டிசம்பர் 9ஆம் தேதியும் நடைபெறும். 13-வது சுற்று போட்டி டிசம்பர் 11ஆம் தேதியும், 14வது சுற்று போட்டி டிசம்பர் 12ஆம் தேதியும் நடைபெறும்.
டை பிரேக் தேவைப்பட்டால் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் 14 சுற்றுப்போட்டிகளும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது 120 நிமிடத்திற்குள் முதல் 40 நகர்த்தலை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 30 நிமிடத்தில் எஞ்சிய நகர்த்தலை மேற்கொள்ள வேண்டும்.
41வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடிகள் கூடுதல் அவகாசம் கிடைக்கும். ஒருவேளை 14 சுற்றுக்களும் சமனில் முடிந்து டை பிரேக் சுற்றுக்குப் போட்டி சென்றால் அது எப்படி நடக்கும் என்று பார்க்கலாம். முதலில் ராபிட் ரவுண்டில் வெற்றியாளர்களை தீர்மானிக்க பார்ப்பார்கள். இதில் மொத்தம் நான்கு சுற்றுகள் நடைபெறும். இதில் இரு வீரர்களுக்கும் தலா 15 நிமிடம் வழங்கப்படும்.
ஒவ்வொரு நகர்த்தலுக்கும் பத்து வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும். இதில் யார் முதலில் இரண்டரை புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்களாக தீர்மானிக்கப்படுவார்கள். அந்த போட்டியும் சமநிலை முடிந்தால், அதன் பிறகு மினி ராப்பிட் ரவுண்டு நடைபெறும். இதில் இரண்டு கேம் நடைபெறும். ஒவ்வொரு வீரருக்கும் தலா பத்து நிமிடங்கள் தரப்படும்.
இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் ஐந்து வினாடிகள் வழங்கப்படும். இதில் யார் ஒன்றரை புள்ளிகளை முதலில் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். அதுவும் சமணில் முடிவடைந்தால் பிலிட்ஸ் மேட்ச் நடைபெறும். இதில் மொத்தம் இரண்டு கேம்கள் நடைபெறும். ஒவ்வொரு வீரருக்கும் தலா மூன்று நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் யார் புள்ளிகளை முதல் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
இந்தப் போட்டியும் சமணில் முடிவடைந்தால் அதன் பிறகு sudden death என்ற முறைப்படி மூன்று நிமிடம் போட்டிகள் நடைபெறும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தொடரில் மொத்தமாக 20 கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு தனியாக ஒரு கோடி ரூபாய் 67 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்தப் போட்டிகளை FIDE youtube சேனலில் கண்டு களிக்கலாம்.