சென்னை: இந்தியாவில் உள்ள 84 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 31 வீரர்கள், வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்துடன் இருப்பது வியப்பை அளித்துள்ளது. இதனால் இந்தியாவின் செஸ் கேப்பிடல் தமிழ்நாடு தான் என்று ரசிகர்கள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் குகேஷ் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றிக்கு பின் குகேஷ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்தியாவின் பல்வேறு நட்சத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் குகேஷ்-ன் இந்த வெற்றி மீண்டும் தமிழ்நாட்டின் பெயரை உலக அரங்கில் பிரம்மாண்டமாக எதிரொலிக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை திணற வைத்தார். தற்போது குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செஸ் ஒலிம்பியாடை நடத்தி தமிழக அரசு, இந்தியாவின் செஸ் கேப்பிடல் சென்னை தான் என்று உரக்க கூறியது. அதனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த தமிழக வீரர்கள் உலக அரங்கில் சாதனைக்கு மேல் சாதனையை படைத்து வருகின்றனர். 2013ல் விஸ்வநாதன் ஆனந்த அடைந்த தோல்விக்கு, இன்று குகேஷ் தனது வெற்றியின் மூலம் மருந்து போட்டுள்ளார்.
இந்த செஸ் வெற்றியால் உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் கிராண்ட்மாஸ்டர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெறுவதற்கு ஃபிடே தரவரிசை பட்டியலில் 2500 புள்ளிகளை 3 முறை எட்டியிருக்க வேண்டும். அப்போது தான் கிராண்ட்மாஸ்டர் பட்டம் அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்தியாவில் மொத்தமாக 84 கிராண்ட்மாஸ்டர்கள் இருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இதுவரை 31 வீரர்கள், வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி தான் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார். இதன்பின் மகாராஷ்டிராவில் 12 வீரர்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளனர்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் 11 பேரும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா 6 பேரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 4 பேரும், கேரளாவில் மூன்று பேரும், கோவா, குஜராத் மற்றும் ஒடிசாவில் 2 பேரும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரும் கிராண்ட்மாஸ்டர் பட்டத்துடன் உள்ளனர். இதன் மூலம் செஸ் விளையாட்டில் தென்னிந்தியா அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.