சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் டி குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் மோதி வருகின்றனர். மொத்தமாக நடைபெற்ற 14 சுற்றுகளாக இறுதிப்போட்டி நடக்கும் நிலையில், யார் முதலில் 7.5 புள்ளிகளை வெல்கிறார்களோ, அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.
இதுவரை நடந்த 13 சுற்றுப் போட்டிகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வெற்றியை பெற்றுள்ளனர். மீதம் நடந்த 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்ததால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி சுற்று தொடங்கி நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் சீனாவின் டிங் லிரன் விளையாடினார்.

குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து இருவரும் ரிவர்ஸ்ட் க்ரன்ஃபெல்ட் திட்டத்துடன் ஆட்டத்தை தொடங்கினர். பின்னர் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், குகேஷ் செய்த 13வது நகர்த்தல் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்தடுத்த நகர்த்தலில் குகேஷ் சுதாரித்து கொண்டு கம்பேக் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்வது தெரிந்தது. ஆனால் குகேஷ் டிரா செய்யக் கூடாது என்பதில் தீவிரம் காட்டினார். 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் டிங் லிரன் 90 நகர்த்தல் வரை சென்று ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இதனால் வரலாறு திரும்புகிறதா என்று ரசிகர்கள் பலரும் பரபரப்பாக ஆட்டத்தை கவனித்து வந்தனர்.
32வது நகர்த்தலிலேயே இருவரும் ராணியை இழந்தனர். இதன்பின் இருவரும் ஒரு ரூக், ஒரு பிஷப் மற்றும் சில Pawn-களை வைத்து களமாடினர். பின்னர் 46வது நகர்த்தலில் டிங் லிரனின் Pawnனை தூக்க, திடீரென ஆட்டத்தை பெரிய மாற்றம் ஏற்பட்டது. இறுதியாக 58வது நகர்த்தலில் டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொள்ள, தமிழ்நாட்டின் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பின் குகேஷ் வென்றிருப்பது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார்.