சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற வீரர் என்ற சாதனையை தமிழ்நாட்டின் குகேஷ் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரனை 7.5 - 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி குகேஷ் அசாத்தியத்தை நிகழ்த்திக் காட்டினார். நவ.26ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டம், தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு போட்டிக்கு இடையிலும் இரு வீரர்களும் மனதளவில் அதிகளவிலான அழுத்தத்தை சந்தித்தனர். நேற்றைய ஆட்டத்தில் கூட டிங் லிரனை தொடர்ச்சியாக குகேஷ் நெருக்கி கொண்டே இருந்தார். டிராவில் முடிய வேண்டிய போட்டியில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்ததால், டிங் லிரன் திடீரென தவறு செய்து தோல்வியடைந்தார்.

இதன்பின் தமிழ்நாட்டின் குகேஷ் தனது வெற்றிக்கு காரணமாக அணியை அறிமுகம் செய்து வைத்தார். கஜவ்ஸ்கி, ரடோஸ்லா, ஹரிகிருஷ்ணா, வின்சென்ட் கெய்மர், ஜான் கிறிஸ்டோஃப் டூடா, ஜான் கிளிம்கவ்ஸ்கி, பேடி அப்டன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இதில் பேடி அப்டனின் பெயர் வந்த போது கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான பேடி அப்டன், எப்படி செஸ் போட்டியில் குகேஷ்-க்கு பயிற்சி கொடுத்தார் என்பதே ஆச்சரியத்திற்கு காரணம். பேடி அப்டன் குகேஷின் மனநலப் பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். பேடி அப்டன் குறித்து குகேஷ் பேசுகையில், கடந்த 6 மாதங்களாக பேடி அப்டனின் ஆதரவு மிகமுக்கியமானதாக இருந்துள்ளது.
அவர் எனது செஸ் குழுவில் இல்லையென்றாலும், இந்தப் பயணத்தில் முக்கியமானவர். குறிப்பாக எதிர்த்து விளையாடும் வீரர்களின் ஃபார்ம் பெரிதாக இல்லாத போது, அந்த அணுகுமுறைக்கு தயாராகினோம். பேடி அப்டன் பெரிதாக செஸ் விளையாட்டை புரிந்து கொள்ளாதவர். ஆனால் இந்த விளையாட்டிற்கு பின் உள்ள உளவியலை எளிதாக புரிந்து கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் பேடி அப்டனுடன் பணியாற்றிய குகேஷுக்கு, அழுத்தமான நேரங்களில் எப்படி அமைதி காப்பது, சிந்திப்பது உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளித்துள்ளார். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை என்று அறிவுறுத்தி வந்துள்ள பேடி அப்டன், ஒவ்வொரு நகர்த்தலின் போதும் அடுத்த நகர்த்தல் குறித்து சிந்திக்க வேண்டாம் என்றும் குகேஷை தயார் செய்துள்ளார்.
இதுதான் டிராவில் முடிவடைய வேண்டிய போட்டியில் கூட குகேஷை வெற்றியை கண்டறிந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது. மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பதற்கு அவருடன் தொடர்ந்து பல்வேறு சூழல்கள் குறித்து கேள்வி, பதில்களால் தயார் செய்துள்ளார். அதேபோல் மனநலப் பயிற்சிக்கு உடல் வலிமையும் முக்கியம் என்பதை வலியுறுத்தியவரும் பேடி அப்டன் தான்.
இதனால் குகேஷ் உடற்பயிற்சியை செய்து வந்துள்ளதோடு, அவரின் மனதில் எழும் கேள்விகளுக்கும் பதில் அளித்து குழப்பத்தை தீர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பேடி அப்டன் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர். அப்போதைய இந்திய அணிக்கு பேடி அப்டன் தான் மனநலப் பயிற்சியாளர். கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்த போது, கொண்டு வரப்பட்டார்.
இதன்பின் 2022ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போதும், பேடி அப்டன் மீண்டும் இந்திய வீரர்களுடன் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே 40 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்கு பேடி அப்டன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். வீரர்களின் மனதில் இருக்கும் குழப்பங்கள் மற்றும் தடைகளை மனநலப் பயிற்சியின் மூலம் சரி செய்து, இந்தியாவுக்கு 3 விளையாட்டுகளிலும் மறக்க முடியாத வெற்றியை தேடி கொடுத்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.