சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் 11 வது சுற்றில் வெற்றி பெற்று தற்போது முன்னிலையில் இருக்கின்றார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரனுடன் 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பலப்பரீட்சை நடத்தினார்.
சுமார் 16 சுற்றுகள் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர்கள் சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள். இந்த குழுவில் முதல் சுற்று சீன வீரர் டிங் லீரனும், மூன்றாவது சுற்றில் குகேஷூம் வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து நான்காவது சுற்றிலிருந்து பத்தாவது சுற்று வரை தொடர்ந்து ஏழு சுற்று ஆட்டங்கள் சமனில் முடிவடைந்தது. இந்த நிலையில் இருவரும் தலா ஐந்து புள்ளிகள் பெற்ற நிலையில் தற்போது 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஆரம்பம் முதலே குகேஷ் அபாரமாக விளையாடி வந்தார்.
28 வது நகர்த்தலின் போது நடப்பு சாம்பியன் ஆன டிங் லீரன் செய்த தவறு ஒன்று போட்டியே அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 29 வது நகர்த்தலிலிருந்து குகேஷ் போட்டியை முடித்து அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் குகேஷ் தற்போது ஆறுக்கு ஐந்து என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறார்.
இன்னும் மூன்று சுற்றுகள் எஞ்சி இருக்கிறது. இதில் மூன்றுமே டிரா அடைந்தால் கூட குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று செஸ் வரலாற்றிலே இளம் வயதில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைப்பார். இதனால் நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.
இதனால் குகேஷ் இன்னும் மூன்று சுற்றுகளை சமம் செய்ய வேண்டும். டிங் லீரன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என நினைப்பார். தற்போது தமிழக வீரர் வெற்றி வாய்ப்பில் இருப்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.