சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ரஷ்யாவில் துவங்குகிறது. கடந்த முறை கார்ல்சனிடம் இழந்த மகுடத்தை இம்முறை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றுவாரா என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
ரஷ்யாவின் சோச்சி நகரில் மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இந்த போட்டி இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை நடக்கிறது.

மாக்னஸுடன் மோதும் விஸ்வநாத்:
இதில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார். இளம் வயதிலேயே சாம்பியன்:
கார்ல்சனைப் பொறுத்தவரையில் இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் ஆனவர். இருப்பினும் சமீபத்தில் நடந்த அமெரிக்க செஸ் தொடரில் இத்தாலியின் பேபியானோவிடம் பட்டத்தை இழந்தார் கார்ல்சன்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு சவால்:
இதனால் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள கார்ல்சன் சர்வதேச தரவரிசையில் 6 ஆவது இடத்திலுள்ள ஆனந்துக்கு சவால் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்று துவக்க விழா:
இன்று துவக்க விழா முடிந்ததும் இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து:
உலக செஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர் ஆனந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் இணையதள செய்தியில், "உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற ஆனந்த்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
எழுந்து வந்துள்ள விஸ்வநாதன்:
வீழ்ந்து விட்டார், சகாப்தம் அவ்வளவுதான் என்றவர்களுக்கெல்லாம் பதிலடி தரும் வகையில் எழுந்து வந்துள்ள செஸ் ஜாம்பவான் விஸ்வநாதனின் வெற்றிக்கு நாமும் வாழ்த்துவோம்!