சென்னை: 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகின் இளம் சாம்பியன் என்ற பெருமையை பெற்று இருக்கும் குகேஷ்-க்கு செஸ் கூட்டமைப்பின் சார்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப் போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகையில் 46 சதவிகிதம் சீன வீரருக்கு அளிக்கப்பட்டது. இதில் குகேஷ்-க்கு 54 சதவிகித பரிசுத் தொகை மட்டுமே கிடைத்து இருக்கிறது.
சீன வீரர் டிங் லிரன் மற்றும் இந்தியாவின் குகேஷ் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மொத்தமாக 25 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இது இந்திய மதிப்பு படி சுமார் 21.2 கோடி ஆகும். இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 14 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பு படி 1.69 கோடி ரூபாய்) பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த 14 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்ற குகேஷ்-க்கு ஆறு லட்சம் டாலர்களும் (இந்திய மதிப்பு படி 5.07 கோடி ரூபாய்), இரண்டு போட்டிகளில் வென்ற டிங் லிரனுக்கு நான்கு லட்சம் டாலர்களும் (இந்திய மதிப்பு படி 3.38 கோடி ரூபாய்) ஒட்டுமொத்த பரிசு தொகையிலிருந்து அளிக்கப்பட்டது.
25 லட்சம் டாலர் பரிசுத்தொகையில் 10 லட்சம் டாலர்கள் வெற்றி பெற்ற போட்டிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 லட்சம் டாலர்கள் இரண்டு வீரர்களுக்கும் சரி சமமாக பிரித்து அளிக்கப்பட்டது. அதன்படி முகேஷ் மொத்தமாக 13.5 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பு 11.45 கோடி ரூபாய்) பெற்றார். சீன வீரர் டிங் லிரன் 11.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பு படி 9.75 கோடி ரூபாய்) பரிசுத் தொகையாக பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் மற்றும் தோல்வி அடைந்த டிங் லிரனுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பரிசுத் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை. அதற்கு காரணம், இந்த தொகையானது வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் அளிக்கப்பட்டது தான்.