
உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனியும், போர்ச்சுக்கலும் மோதின. அப்போது ஜெர்மனியின் தாமஸ் முல்லரின் தலையை முட்டி சண்டை போட்டதற்காக போர்ச்சுக்கல் வீரர் பெப்புக்கு நடுவர் ரெட் கார்ட் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேற்றினார். இந்த சம்பவம் நடைபெற்றபோது, போர்ச்சுக்கல் அணியின் நடுவரிசை வீரர் ரவுல் மெய்ரேலஸ், நடுவருக்கு பின்னால் நின்று கொண்டு இரு கைகளின் ஆள்காட்டி விரலையும் மேல் நோக்கி தூக்கி காண்பித்து அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போர்ச்சுக்கீஸ் கால்பந்தாட்ட சம்மேளனம் "இதுபோன்ற யூகங்கள் விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிடும். நடுவருக்கு எதிராக எங்கள் அணி வீரர் அதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை" என்று தெரிவித்துள்ளது.