பிரேசிலியா: உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறி விட்ட போதிலும் போகிற போக்கில் பிரேசிலை பதம் பார்த்து விடலாம் என்று நினைத்திருந்த காமரூன் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் சாமுலவேல் எட்டோ இன்று நடைபெறும் பிரேசிலுடனான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காமரூன் பயிற்சியாளர் வோல்கர் பிங்கே கூறுகையில், எட்டோ முழங்கால் காயத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே பிரேசில் போட்டியில் அவர் ஆட மாட்டார் என்றார்.
இந்தக் காயம் காரணமாகத்தான் குரோஷியாவுடன் நடந்த போட்டியில் எட்டோ ஆடவில்லை. அப்போட்டியில் காமரூன் அணி 0-4 என்ற கோல் கணக்கில் கேவலமாக தோற்று உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டது.

மேலும் மெக்சிகோவுடனான போட்டியிலும் 0-1 என்ற கணக்கில் காமரூன் தோற்று அவமானத்தைத் தேடிக் கொண்டது. இந்தத் தொடரில் காமரூன் ஒரு கோல் கூட போடாமல் போனது ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
தற்போது ஏ பிரிவில் பிரேசில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மெக்சிகோவும் 4 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் பிரேசில் நல்ல முன்னணியில் உள்ளது. குரோஷியா 3 புள்ளிகளுடன் உள்ளது.