கேல் ரத்னா விருது கணக்கு என்ன?
விளையாட்டு வீரர்களின் கடந்த நான்கு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் கேல் ரத்னா விருதுகள். இந்த ஆண்டு முதல் தான் இந்த விருதுக்கு புள்ளிகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமாகி உள்ளது. இதில் மற்றொரு, விஷயம் கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுக்களுக்கு ஒலிம்பிக், ஆசிய போட்டிகள் மற்றும் பிற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். அவற்றுக்கு புள்ளிகளும் வழங்கப்படும். ஆனால், கிரிக்கெட், ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் இடம் பெறாத விளையாட்டு என்ற காரணத்தால் அதற்கு எந்த வரையறையும் இல்லை. புள்ளிகளும் இல்லை.
கோலி 0, பஜ்ரங் புனியா 92
கடந்த நான்கு ஆண்டுகள் செயல்பாடுகள் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்பட்டதில் கோலி 0 தான் பெற்றுள்ளார். காரணம் கிரிக்கெட்டுக்கு புள்ளிகள் இல்லை. அதே சமயம் பிற விளையாட்டு வீரர்கள் பெற்ற புள்ளிகளில் மல்யுத்த விளையாட்டின் வினேஷ் போகாட் 93 புள்ளிகளும், பஜ்ரங் புனியா 92 புள்ளிகளும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பின்னே பாரா-அத்லெட் தீபா மாலிக் 78.4 புள்ளிகள் பெற்று இருக்கிறார். மீராபாய் சானு 63 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இரண்டு பிரச்சனைகள்
பஜ்ரங் புனியா இப்போது இந்த விஷயத்துக்கு தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை கோலி அல்லது மீராபாய் சானுவுக்கு கொடுத்தது தவறில்லை. தான் அதிக தகுதியோடு இருந்தும் தனக்கு ஏன் மறுக்கப்பட்டுள்ளது? என்பதே அவரது புகார். எந்த அடிப்படையில் அவரை நிராகரித்தார்கள்? புள்ளிகள் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி, அதில் தான் அதிக புள்ளிகள் பெற்றும், தனக்கு விருது கிடைக்காதது ஏன்? என்பதே அவரது கேள்வி. இதில் இரண்டு குழப்பங்கள் உள்ளது. புள்ளிகள் படி பார்த்தால் வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா தான் தகுதி பெறுகிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதற்கு விளக்கம் தெரியவில்லை. கிரிக்கெட்டுக்கு புள்ளிகள் இல்லை என்றால், எப்படி கிரிக்கெட் வீரரின் தகுதியை கணக்கிடுகிறார்கள்? இதற்கும் பதில் இல்லை. அதிக உறுப்பினர்களின் ஒப்புதல் பெறும் வீரருக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் எதற்காக புள்ளிகள் முறை அமல்படுத்தப்பட்டது? அதன் பயன் என்ன?
நான் கோர்ட்டுக்கு போறேன்
பஜ்ரங் புனியா இது தொடர்பாக விளையாட்டு அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் இது தொடர்பாக விசாரிப்பதாகவும், நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும் என உத்தரவாதம் அளித்ததாகவும் கூறினார் பஜ்ரங். எனினும், தான் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறியுள்ளார் பஜ்ரங். "கோலி, மீராபாய் இருவரும் சிறந்த விளையாட்டு வீரர்கள். அவர்கள் விருது பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால், எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்பதற்கு தேர்வாளர்கள் பதில் கூற வேண்டும்" என பஜ்ரங் நியாயம் கேட்கிறார். பஜ்ரங் புனியா காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.