டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பாஜக எம்பி-யும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதுமட்டுமல்லாமல் மல்யுத்த போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பலரும் பிரிஜி பூஷண் சரண் சிங் கைது செய்யப்படும் வரை வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதலுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
அதுமட்டுமல்லாமல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கான தேர்தலை 45 நாட்களில் நடத்த மே மாதம் 30ஆம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மல்யுத்த வீரர்கள் போராட்டம், வழக்குகள் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 12ஆம் தேதி மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக எம்பி பிரிஜ் பூஷ்ண் சரண் சிங் ஆதரவாளர்கள் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் உரிய நேரத்தில் இந்திய மல்யுத்த நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தாத காரணத்தால் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தியா சார்பில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மல்யுத்த வீரர்கள் இனி இந்திய தேசியக் கோடி, தேசிய கீதம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.