ஹைதராபாத் : WWE வீரர்கள் இந்தியாவில் WWE Superstar Spectacle என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜான் சீனா உள்ளிட்ட முன்னணி ரெஸ்ட்லிங் வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இதைக் காண ஹைதராபாத், காச்சிபௌலி உள் விளையாட்டரங்கில் 5000 ரசிகர்கள் குழுமி இருந்தனர். இந்த நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஜான் சீனா - செத் ரோலின்ஸ் டேக் டீம் போட்டிதான்.
ஜான் சீனா எப்போதும் மேடையில் ஏறிய உடன் தன் ஜெர்சியை கழற்றி வீசுவார். அதே போல, இந்த முறையும் அவர் வீச, அதை கீழே இருந்த ரசிகர்கள் ஐந்து பேர் ஒரே நேரத்தில் பிடித்துக் கொண்டு விட மறுத்தனர்.
அவர்கள் அனைவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. போட்டி துவங்கி நடந்து கொண்டிருந்த போதும் இவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். எனினும், அது போட்டியை பாதிக்கவில்லை.
பொதுவாக ரெஸ்ட்லிங் வீரர்கள் வீசும் பொருட்களை யாராவது சிலர் பிடித்தால் மற்றவர்கள் அதை விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இங்கே நடந்ததோ மிகவும் நகைப்புக்குரிய வகையில் இருந்தது.

இந்தப் போட்டியில் கைசர் - வின்சி ஜோடியை வீழ்த்தி ஜான் சீனா - செத் ரோலின்ஸ் வெற்றி பெற்றனர். மேலும், வுமன்ஸ் சாம்பியன் ரியா ரிப்லி, நடால்யா வுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன் சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டார்.
இந்திய வீரர்களான ஜிந்தர் மஹால், வீர் மகான், சங்கா ஆகியோர் மற்றொரு டேக் டீம் போட்டியில் சாமி ஸெய்ன், கெவின் ஓவன்ஸ், டிரூ மெக்கின்டயர்-இடம் தோல்வி அடைந்தனர்.