கலிஃபோர்னியா : WWE எனப்படும் மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் வாய்ந்த வீரர் என்றால் அது தி அண்டர்டேக்கர் தான். தி அண்டர்டேக்கர் கதாபாத்திரத்தை ஏற்று கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் மார்க் கால்வே, கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் WWE தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
தற்போது 59 வயதான அண்டர்டேக்கர் மீண்டும் மல்யுத்த போட்டிகளில் வந்து பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஏனென்றால் wwe-ல் நடத்தப்படும் மிகவும் பெரிய தொடர் என்றால் அது ரசில் மேனியா தான்.

இதில் அண்டர்டேக்கர் தொடர்ந்து 21 முறை வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ரசில் மேனியா நடப்பாண்டு நடைபெற இருக்கிறது. இதில் அண்டர்டேக்கர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்டர்டேக்கர், இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
தமது உடல் வலு குறைந்து விட்டதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக மல்யுத்தத்தில் ஈடுபட்டதால் தமது உடலில் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அண்டர்டேக்கர் கூறியிருக்கிறார். தமது கால் முட்டி தேய்மானம் அடைந்ததால் தற்போது புதிய முட்டி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், தற்போது தமக்கு வலி இல்லை என்றாலும் இந்த புதிய முட்டியை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு என்றும் அண்டர்டேக்கர் கூறியிருக்கிறார்.
இதேபோன்று தமது முதுகுத்தண்டு, கழுத்து, கீழ் முதுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அண்டர்டேக்கர், இதன் காரணமாக இனி தம்மால் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாது என்று கூறியிருக்கிறார். இருப்பினும் ஏதேனும் கௌரவத் தோற்றத்தில் வேண்டுமானாலும் தாம் வர வாய்ப்பு இருப்பதாகவும் ஆனாலும் அப்போதும் சண்டையிட முடியாது என்றும் அண்டர்டேக்கர் கூறியிருக்கிறார்.
இதேபோன்று தனது கடைசி ஆண்டில் ஜான் சீனா விளையாடி வருவதாகவும், அவர் 17வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வெல்வேன் என்றும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி உள்ள அண்டர்டேக்கர், ஜான் சீனா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு பதில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அது டபிள்யூ டபிள்யூ இ நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார்.