நியூயார்க் : WWE ரெஸ்ஸில்மேனியா 40 நிகழ்ச்சியில் ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அண்டர்டேக்கர் திடீரென மேடையில் தோன்றினார். அப்போது ராக்கிற்கு சோக்ஸ்லாம் போட்டு அவரை மேடையில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவம் WWE ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது.
ரெஸ்ஸில்மேனியாவில் ரோமன் ரெய்ன்ஸ் - கோடி ரோட்ஸ் இடையேயான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு சில வாரங்கள் முன்னதாக ரோமன் ரெய்ன்ஸின் உறவினரான ராக் பல ஆண்டுகள் கழித்து WWE-க்கு திரும்பினார். அவர் ரோமன் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க உதவ இருப்பதாக கூறி இருந்தார். மேலும், கோடி ரோட்ஸ்-ஐ பெல்ட்டால் அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் ரெஸ்ஸில்மேனியாவில் தங்கள் விருப்பப்படி தான் போட்டி நடக்க வேண்டும் என ரோமன் ரெய்ன்ஸ் தரப்பு கூறியது. அதன்படி போட்டியில் எந்த குறுக்கீடு வந்தாலும் போட்டி நிறுத்தப்படாது என கூறி இருந்தது. இந்த நிலையில் போட்டியில் கோடி ரோட்ஸ்-ஐ தாக்க ரோமன் ரெய்ன்ஸ் ஆதரவு வீரர் ஒருவர் வந்தார். அவரை வீழ்த்த ஜான் சீனா மேடைக்கு வந்தார்.
பின்னர் ராக் மேடைக்கு வந்தார். அவருக்கும் ஜான் சீனாவுக்கும் மோதல் எழுந்தது. அதன் முடிவில் ஜான் சீனாவை ஸ்லாம் போட்டு வெளியேற்றினார் ராக். பின்னர் தன் பெல்ட்டை எடுத்து கோடி ரோட்ஸ்-ஐ அடிக்க தயாராக இருந்தார். அதன் மூலம் ரோமன் ரெய்ன்ஸ் எளிதாக போட்டியில் வெல்ல ராக் உதவ இருந்தார். ஆனால், அப்படி நடந்தால் போட்டி நியாயமாக இருக்காது.
இந்த நிலையில் திடீரென அங்கு மின் விளக்குகள் அணைந்தது. அண்டர்டேக்கரின் இசையான மணியோசை இசைக்கப்பட்டது. இதை அடுத்து ராக் அரண்டு போனார். அண்டர்டேக்கர் வழக்கம் போல அவருக்கு பின்புறமாக வந்து நின்றார். அதை எதிர்பாராத ராக் அதிர்ச்சியில் நிற்க, அண்டர்டேக்கர் அவருக்கு சோக்ஸ்லாம் போட்டு வெளியேற்றினார்.
இதை அடுத்து 5 நிமிட இடைவேளையில் ராக், ஜான் சீனா, அண்டர்டேக்கர் போன்ற ஜாம்பவான்களை மேடையில் கண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். பின்னர் கோடி ரோட்ஸ் இந்தப் போட்டியில் ரோமன் ரேயன்ஸ்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். சுமார் மூன்று ஆண்டு காலம் WWE சாம்பியனாக இருந்த ரோமன் ரெய்ன்ஸ் தோல்வி அடைந்தார்.