டெல்லி: மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கிய வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷவர் தத் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார். ஆனால் 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து அவருக்கு வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட உள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ எடை பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த பெசிக் குடுகோவ்(27) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெசிக் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். இந்நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது சேகரித்த பெசிக் உள்பட 5 வீரர்களின் மாதிரிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு பரிசோதனை செய்தது.
அதில் பெசிக் உள்பட 5 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பெசிக்கின் வெள்ளிப் பதக்கம் யோகேஷ்வருக்கு அளிக்கப்படுகிறது.
இந்த தகவலை யோகேஷ்வரும் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார். தனது வெள்ளிப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
आज सुबह पता चला की मेरा olympic medal upgrade हो कर Silver medal हो गया है। ये मेडल भी देशवासियों को समर्पित हैं🇮🇳 pic.twitter.com/S6qxNHW9Po
— Yogeshwar Dutt (@DuttYogi) August 30, 2016