யோகேஷ்வர் தத்திற்கு அடித்தது அதிருஷ்டம்.. லண்டன் ஒலிம்பிக் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு!
டெல்லி: 2012 லண்டன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளதாம்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ மல்யுத்த பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். 2013ம் ஆண்டு ரஷியாவில் நடந்த விபத்தில் அவர் உயிர் இழந்தார்.

ஊக்க மருந்து
தற்போது ரஷ்யா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளதால், 2012ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து வீரர்கள், ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பெசிக் குடுகோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்படுகிறது. இதனால் அந்த பிரிவில் வெண்கலம் வென்றிருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும் என கூறப்பட்டது.

மறுத்த யோகேஷ்வர்
இதனிடையே இந்த பதக்கம் தனக்கு வேண்டாம் என்று யோகேஷ்வர் தத் டிவிட்டரில் கூறியுள்ளார். பெசிக் குடுகோவ் சிறந்த வீரர். அவர் இறந்துள்ள நிலையில், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளது சோகம். ஒரு விளையாட்டு வீரர் என்ற வகையில் அவரை நான் மதிக்கிறேன். வாய்ப்பு இருக்குமானால், வெள்ளி பதக்கம், பெசிக் குடுகோவ் குடும்பத்தினரிடமே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அப்படி செய்வதுதான், உயிரிழந்த பெசிக் குடுகோவ் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும். என்னை பொறுத்தளவில், மனிதாபிமானம்தான் எல்லாவற்றையும்விட உயர்வானது என்று நினைக்கிறேன். இவ்வாறு டிவிட் செய்திருந்தார் யோகேஷ்வர் தத்.

தங்கம் வெல்ல வாய்ப்பு
இந்நிலையில், யோகேஷ்வர் தத் தங்கம் வெல்லவே வாய்ப்பு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், அந்த போட்டியில் தங்கம் வென்ற அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த டோக்ருல் அஸ்கரோவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் வரவில்லை
இதுகுறித்து யோகேஷ்வர் தத்திடம் கேட்டபோது, தனக்கு அதுபற்றி எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார். அதேநேரம், யோகேஷ்வர் தத் ரத்த மாதிரியும் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications