டெல்லி: டெல்லிக்கு வந்த விமானத்தின் டாய்லெட்டில் உயிரிழந்த நிலையில், முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு சிசு கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக
நடத்தப்பட்ட விசாரணையில், தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது. ரத்தப் போக்குதான் என்று நினைத்ததாக, 19 வயது டேக்வாண்டோ வீராங்கனை கூறியுள்ளார்.

குவஹாத்தியில் இருந்து டெல்லிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தின் டாய்லெட்டில், காகிதத்தில் சுற்றப்பட்ட நிலையில், இறந்த நிலையில், முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட உடனடி விசாரணையில், அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு இளம் பெண்தான், அந்தக் கருவின் தாயாக இருக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் அந்தப் பெண்ணை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்ததால், சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால், விமான பயணத்தின்போது திடீர் என ரத்தப் போக்கு ஏற்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தாரும், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்று கூறியுள்ளனர்.
19 வயதாகும் அந்தப் பெண் ஒரு டேக்வாண்டோ வீராங்கனை. தென்கொரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அவருடன், அவருடைய கோச்சும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் பிறக்கும் நிலையில் கரு இருக்கும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் அந்தப் பெண் இருந்துள்ளார். அதைவிட தற்போது அவருடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.