சிரிய கடலில் விழுந்து... 20 உயிர்களை மீட்டு... மக்கள் மனக் கடலில் ராணியாக நீச்சலடிக்கும் யுஸ்ரா!
ரியோ டி ஜெனீரோ: யுஸ்ரா மர்டினி.. ஒலிம்பிக் வரலாற்றில் முத்திரை பதித்த தனிச் சிறப்பு வாய்ந்தவர். சிரியாவைச் சேர்ந்த யுஸ்ரா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணியில் இணைந்து நீச்சல் போட்டியில் பங்கேற்று வரலாறு படைத்துள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் மர்டினிககும் அவரைப் போலவே அகதிகள் அணியில் இடம் பெற்று ஆடும் பல்வேறு நாட்டவர்களுககும் தனி இடம் கிடைத்துள்ளது. காரணம், ஒலிம்பிக் வரலாற்றில் இதுதான் முதல் அகதிகள் அணியாகும்.
புலம் பெயர்ந்து, அகதிகளாக வாழும் இவர்கள் விளையாட்டுத்துறையில் தங்களது முத்திரையைப் பதிக்க ரியோ வந்துள்ளனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் இவர்களின் வலி எழுத்தில் வடிக்க முடியாதது.

மர்டினி
இதில் அனைவரையும் கவர்ந்திழுப்பவர் மர்டினிதான். காரணம் இவர் செய்த செயல் அசாத்தியமானது. சிரியாவைச் சேர்ந்தவர் மர்டினி. அங்கிருந்து படகு மூலமாக உயிரைப் பணயம் வைத்து நாட்டை விட்டு வெளியேறி வந்தார்.
20 உயிர்களைக் காத்த வீர மங்கை
படகில் வரும்போது அவரது படகு கவிழ்ந்து விட்டது. கரைக்கு அருகே வந்து படகு கவிழும் நிலை ஏற்பட்டது. படகில் 20 பேர் இருந்தனர். அப்போது சற்றும் பயப்படாமல் படகிலிருந்து கடலில் குதித்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீச்சலடித்தபடி படகை கரையை நோக்கி செல்ல உதவினார் மர்டினி.

ஜெர்மனியில் தஞ்சம்
மர்டினியும் மற்றவர்களும் இப்படியாக போராடி ஜெர்மனியை அடைந்தனர். அங்குதான் தற்போது தஞ்சமடைந்துள்ளார் மர்டினி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கிய அகதிகள் அணியில் இடம் பெற்று ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.

தோற்றது முக்கியமில்லை
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பட்டர்பிளை மற்றும் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவுகளில் அவர் கலந்து கொண்டார். இரண்டிலும் அவர் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தன்னைப் போன்ற அகதிகள் குறித்து உலகின் பார்வையைத் திருப்பிய திருப்தி அவரிடம் உள்ளது.

தொடர்ந்து அகதிகளுக்காக உழைப்பேன்
தனது போட்டியின் முடிவில் செய்தியாளர்களிடம் மர்டினி பேசுகையில், நான் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். தொடர்ந்து அகதிகளுக்கு ஆதரவாக உறுதுணையாக இருப்பேன். அவர்களுக்காக பாடுபடுவேன் என்றார் மர்டினி.


Click it and Unblock the Notifications